கவிதை பற்றிய கவிதை


தலைப்பு : கவிதை

அழகியலா கவிதை?
அகவியலா கவிதை?
அறிவியலா?
புறவியலா?
உணர்வியலா?
உளவியலா?
உள்ளவியலா?
கவிதையே உன் வரையறை தான் என்ன?
உன் அளவியல் தான் என்ன?

சுற்றம் முற்றும் உற்றுப் பார்
கற்றதும் பெற்றதும் உற்றதும் உற்றுப் பார்
உலக உயிர்கள் உவமானமாகும்
உவமைகள் உருவகங்கள் அணிகள் அணி வகுக்கும்
உணர்வுகள் உருண்டு வரும்
அனுபவங்கள் திரண்டு வரும்

கவிதை எனப்படுவது யாதெனின் உணர்வோடு மொழியே

உன் உள்ளம் உள்ளினுள் ஊறிய சொல்லாறு
பல உள்ளம் உள்ளினுள் பாய்ந்து சென்று
மனச்சுமை வெப்பம் தணித்தல் நன்று
அகக்கறை அக்கறையோடு அகற்றல் நன்று

உன் உள்ளம் உள்ளினுள் ஊறிய சொல்லாறு
இனிமையாய் இருத்தல் இனிது
நல்சொல் நல்குதல் நன்று

கவிதை எனப்படுவது யாதெனின் உள்ளத்தின் மொழியே

- கார்த்திகேயன் பார்கவிதை

Comments